அமெரிக்கா அதிபர் நிக்சன், பேரறிஞர் அண்ணாவை சந்திக்கவில்லை என்பதற்காக காமராஜருக்கு கோபம் வந்தது உண்மைதானா? என சீமானின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மகனும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க முத்து நேற்று முன் தினம் (ஜூலை 19) மறைந்தார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதான் என்பார்கள்; அமெரிக்கா செல்லும் போது அந்நாட்டு அதிபர் நிக்சனை சந்திக்க பேரறிஞர் அண்ணா விரும்புகிறார். ஆனால் அவர் அனுமதி தரவில்லை. நிக்சன், இந்தியா வரும் போது காமராஜரைச் சந்திக்க விரும்புகிறார்; நம் அண்ணாவை சந்திக்க விரும்பாதவரை நாம் ஏன் சந்திக்க வேண்டும் என்று காமராஜர் சொன்னதாக சீமான் குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Vijayashankar Ramachandran criticized Seemans comments
பேரறிஞர் அண்ணா 1969-ம் ஆண்டு மறைவெய்தினார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டு காலமானார். இது வரலாறு. ஆனால் காமராஜர் மறைந்த போது அண்ணா அழுதார் என்கிற சீமானின் கருத்து பொய் புரட்டு என்கிற விமர்சனம் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல சீமான் கூறிய அண்ணா- நிக்சன்-காமராஜர் விவகாரத்தையும் மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் விமர்சித்து சீமானின் கருத்தை மறுத்துள்ளார். Vijayashankar Ramachandran criticized Seemans comments
இது தொடர்பாக விஜய சங்கர் ராமச்சந்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: 1975இல் காமராஜ் இறந்தபோது 1969-இல் இறந்த அண்ணா அழுத கதை இருக்கட்டும். அண்ணா அமெரிக்கா சென்ற போது அன்று துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனை சந்திக்க விரும்பியதாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் கூறுகிறார் சீமான். அது உண்மையா என்று தெரியவில்லை.
ஆனால் நிக்சன் அண்ணாவை சந்திக்க மறுத்ததால் கோபம்/வருத்தம் அடைந்த காமராஜர், நிக்சன் இந்தியாவுக்கு வந்தபோது அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறுகிறார் சீமான். Vijayashankar Ramachandran criticized Seemans comments
முதல்வர் அண்ணா அமெரிக்காவுக்கு ஏப்ரல்-மே, 1968இல் சென்றார். அதே ஆண்டு செப்டம்பரில் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார். துணை அதிபராக நிக்சன் இந்தியாவுக்கு வந்தது நவம்பர் 1953இல். சென்னையில் துவங்கியது அவரது பயணம். ஐந்து மணி நேரம் சென்னையில் இருந்தபோது அவர் 90 நிமிடங்கள் முதல்வர் ராஜாஜியுடன் பேசிக் கொண்டிருந்தார் என்று தி இந்து செய்தி கூறுகிறது.

அடுத்த முறை அமெரிக்காவின் அதிபராக நிக்சன் இந்தியாவிற்கு வந்தது ஜூலை 31, 1969இல். இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் அவர்தான். 23 மணி நேரம் மட்டுமே டெல்லியில் இருந்த அவர் பிரதமர் இந்திராவையும், துணை குடியரசுத் தலைவர் ஹிதாயதுல்லாவையும் மட்டுமே சந்தித்தார்.
காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு அவரை வெளியேற்றுவதற்கு முற்பட்ட நேரத்தில் இந்த விஜயம் நடந்ததால் அப்போதும் காமராஜர், நிக்சன் மீதான கோபத்தைக் காட்டியிருக்க வாய்ப்பில்லை. (நவம்பர் 12, 1969-ல் இந்திரா காங்கிரசிலிருந்து காமராஜர் வெளியேற்றப்பட, கட்சி இரண்டாக உடைந்தது). அந்த நேரத்தில் அண்ணா உயிருடன் இல்லை. எங்கே தேடுவேன்? உண்மையை எங்கே தேடுவேன்?” இவ்வாறு தெரிவித்துள்ளார். Vijayashankar Ramachandran criticized Seemans comments
