தமிழ் சினிமாவில் தன்னுடைய படத்தின் தலைப்புகள், காதல் கதைகள் மூலம் தனித்த அடையாளத்தையும், நாகரிகமான ரசனையுள்ள ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன்.
தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை கெளரவமாக தமிழ் இயக்குநர்களும், நடிகர்களும் கருதுகின்றனர். தமிழை தவிர்த்து அப்டேட் என்கிற ஆங்கில சொல்லாடலுக்கு பத்திரிகை உலகம் மாறிவிட்டது.
இவற்றுக்கு மத்தியில் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், இயக்கிய முதல் படமான ’மின்னலே’ தொடங்கி கடைசியாக வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரை கொஞ்சும் தூய தமிழில் பெயர் வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.
அவரது இயக்கத்தில் ‘ஜோசுவா இமை போல காக்க’ திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக அளவில் இந்தப் படத்தில் 12 ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு எந்தப் படத்திலும் நான் செய்யாத ஒரு விஷயம் இது.
ஆக்க்ஷன் காட்சிகளை ‘ஜவான்’, ‘சிட்டாடல்’ புகழ் யானிக்கும், பென் கோரியோகிராப்பும் செய்திருக்கிறார்.
‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.
‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் வேறொரு ஜானரில் என்னை தகவமைத்துக் கொண்டேன். அதுபோல, இந்தப் படமும் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்க்ஸ்டரிடம் இருந்து எப்படி கதாநாயகியை இமைப் போல ஜோஷ்வா காப்பாற்றுகிறான் என முழுக்க முழுக்க ஆக்க்ஷனில் வடிவமைத்துள்ளோம். இந்தப் படம் மூலம் என்னால் முழுக்க ஆக்க்ஷன் படத்தைக் கையாள முடியும் எனத் தெரிந்து கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்