”சக மலையாள நடிகர்களே காயப்படுத்திருக்காங்க… ஆனா கமல் சார்“ – ஜோஜூ ஜார்ஜ் உருக்கம்!

Published On:

| By christopher

Joju George joy after kamal praise him for iratta

”சக மலையாள நடிகர்களே என்னை காயப்படுத்திருக்காங்க. ஆனால் கமல் சார் பாராட்டு எனக்கு ஆஸ்கர் மாதிரி” என பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். Joju George joy after kamal praise him for iratta

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொறாமைப்பட்டிருக்கிறேன் ஜோஜு!

அன்று மேடையில் பேசிய கமல், அங்கிருந்த சக நடிகர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி பேசினார்.

அப்போது மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஜோஜு ஜார்ஜ் குறித்து பேசுகையில், “முதலில் எனக்கு ஜோஜு ஜார்ஜை யார் என்று எனக்கு தெரியாது. அவரது இரட்டை (Iratta) படத்தை பார்க்க சொன்னார்கள். அதை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். ஏனெனில் நான் 30க்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை பொறுத்தவரை ஜோஜு ஜார்ஜ் மிக சிறப்பாக நடித்திருந்தார்.

ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடக்கும் கதையாகத்தான் அது இருக்கும். வித்தியாசம் தெரியும்: படம் பார்க்கும்போதே இரட்டை வேடங்களை வித்தியாசம் கண்டுபிடித்துவிடலாம். அதனை பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன் ஜோஜு” என்றார். இதனை கேட்ட ஜோஜு ஜார்ஜோ கண்கலங்க கமலுக்கு நன்றி தெரிவித்தார்.

https://twitter.com/AbGeorge_/status/1926520455520825734

கமல் பேசியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’கலை என்னை வாழ்த்தியது’ என தலைப்பிட்டு மிக உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளது.

எனது உண்மையான ஆஸ்கர்!

அதில், “நன்றி கமல் சார். என்னுடைய கனவு நனவானது. பெரிய விருதுகளைப் பெற வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் எனக்கு, உங்கள் அற்புதமான வார்த்தைகளும், என் நடிப்பைப் பாராட்டுவதும் நான் ஆஸ்கர் வென்றது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. நீங்கள் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார், எங்களின் உலகளாவிய முன்மாதிரி. நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன் மற்றும் ஒரு நல்ல சீடன்.

நடிப்பில் உங்கள் அனைத்து சிறிய தருணங்களையும் கூட நாங்கள் எப்போதும் எதிர்நோக்கி இருக்கிறோம். எனவே, உங்களிடமிருந்து அத்தகைய பாராட்டு பெறுவது எனது உண்மையான ஆஸ்கார்.

என்னை மோசமாக காயப்படுத்தினர்!

எனது கதாப்பாத்திரங்களை முழுமையாக்க நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களிலும் நான் எப்படி நடித்தேன் என்பதை சக மலையாள நடிகர்கள் என்னிடம் சொல்வார்கள் என்று நான் எப்போதும் எதிர்பார்ப்பேன். இருப்பினும், எனது சொந்தத் துறையில் எனது கதாப்பாத்திரங்களையும் பணியையும் மிகச் சிலரே பாராட்டினர்.

எனது பட போஸ்டர்களைக் கூட பிரபலங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் சிரமப்பட்டேன்; பெரும்பாலும், நான் உண்மையில் என்ன செய்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். பல ஊடகவியலாளர்கள் மற்றும் சக நடிகர்கள் என்னை மோசமாக காயப்படுத்தினர்.

மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன்!

ஆனால் இன்று, கமல் சாரிடமிருந்து அத்தகைய பாராட்டு எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அது என் நாளையே மாற்றியது. எனக்கு, ’ஜோசப்’ படம் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. என் வாழ்க்கையில் நடந்த மீதமுள்ளவை ஒரு போனஸ் மட்டுமே. ஒரு மனிதனாக, கமலின் வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தியும் திருப்தியும் அடைந்தேன். மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். மணி ரத்னம் சார் மற்றும் சிம்பு சார் சொன்னது போல், இவை அனைத்தும் என்னை மகிழ்ச்சியடையச் செய்தன.

தக் லைஃப்பில் அவர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவம். இப்படம் ஒரு கலை மற்றும் உணர்ச்சிபூர்வமான தலைசிறந்த படைப்பாக, வாழ்க்கையில் முன்னேற எனக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது. எனது நேர்மறைகளைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்து எதிர்மறைகளையும் நான் கண்டறிந்த ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையிலிருந்து, இப்போது நான் மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். இந்த பாராட்டுகளை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

மணி சார், என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தையும் உங்களுடன் பணியாற்றுவதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியதற்கு நன்றி. நான் சினிமாவை நம்புகிறேன், என் பயணம் தொடர்கிறது… அனைவருக்கும் நன்றி” என ஜோஜூ பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து மலையாள திரையுலகைச் சேர்ந்த டொவினோ தாமஸ், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் தற்போது ஜோஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share