அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 10) அதிகாலை இஸ்ரேல்-பாலஸ்தீன போர் பற்றி ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் “இஸ்ரேல் அரசுக்கு உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவை” மீண்டும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அதில், “இன்று, நாங்கள் இஸ்ரேல் அரசுக்கு எங்கள் உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கிறோம். ஹமாஸ் மற்றும் அதன் பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் தெளிவான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை, சட்டப்பூர்வ தன்மையும் இல்லை . ஹமாஸ் உலகளவில் கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இல்லை,
சமீப நாட்களில், ஹமாஸ் பயங்கரவாதிகள்… வீடுகளில் இருந்த இஸ்ரேலிய குடும்பங்களைக் கொன்று குவித்ததையும், இசை விழாவில் மகிழ்ந்த 200 இளைஞர்களைக் கொன்று குவித்ததையும்,
இப்போது பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள வயதான பெண்கள், குழந்தைகள் மற்றும் முழு குடும்பங்களையும் அவர்கள் கடத்தப்படுவதையும் உலகம் திகிலுடன் பார்க்கிறது.
இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராகத் தன்னையும் அதன் மக்களையும் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் முயற்சிகளுக்கு நமது நாடுகள் ஆதரவளிக்கும்.
இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு தரப்பும் இந்தத் தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்ள இது ஒரு தருணம் அல்ல என்பதை நாங்கள் மேலும் வலியுறுத்துகிறோம், ”என்று தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “நாங்கள் அனைவரும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான அபிலாஷைகளை அங்கீகரிக்கிறோம்.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கிறோம்.
ஆனால் ஹமாஸ் பாலஸ்தீனியர்களின் கோரிக்கைகளை, அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மேலும் ஹமாஸ் பாலஸ்தீன மக்களுக்கு இரத்தக்களரியை தவிர வேறு எதையும் வழங்காது.
இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான நிலைமைகளை அமைப்பதற்கும்,
இஸ்ரேலின் நட்பு நாடுகளாகவும், பொதுவான நண்பர்களாகவும் நாங்கள் ஒற்றுமையாகவும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றும் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுவில் ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை ரஷ்யா தனது வீட்டோ பவர் மூலம் தடுத்துவிட்டதால்… இந்தத் தலைவர்கள் வெளியே கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் இஸ்ரேலுக்கு உலகளாவிய ஆதரவும், ராணுவ பலமும் அதிகரித்துள்ளது.
–வேந்தன்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பற்களை பளபளவென வெள்ளையாக்குவது எப்படி? இதோ வீட்டில் ஈஸியா செய்து பாருங்கள்!