சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை போலீஸார் இன்று (ஏப்ரல் 13) கைது செய்தனர். john jebaraj arrested by pocso act april 13
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (35). இவர் கோவையில் கிங்ஸ் ஜெனரேஷன் என்ற தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வந்தார். மேலும் கிறிஸ்தவ பாடல்களை பாடி சமூகவலைதளங்களிலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் கடந்தாண்டு மே 21 ஆம் தேதி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் கலந்து கொண்ட 14, 17 வயதை சேர்ந்த இரு சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர் தலைமறைவானதை அடுத்து வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாவட்ட காவல் துறை சார்பில் விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலம் மூணாறில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மத போதகர் ஜான் ஜெபராஜை இன்று காலை சுற்றிவளைத்த காட்டூர் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காட்டூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
