ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்.சி.பி அணி சந்தித்த மோசமான தோல்வியை நல்லது என்று கூறிய அந்த அணியின் புதிய கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் கருத்து சர்ச்சையானது. Jitesh Sharma’s bizarre statement after rcb lost
லக்னோ வாஜ்பாயி மைதானத்தில் நேற்று (மே 23) இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களம் கண்ட பெங்களூரு அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த அந்த அணி, அடுத்த 16 ரன்கள் எடுப்பதற்குள்ள 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ஆல் அவுட் ஆனது. இது இந்த சீசனில் ஆர்.சி.பி அணியின் மோசமான தோல்வியாக மாறியுள்ளது.
இதனால் ரன்ரேட் குறைந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பஞ்சாப் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுதொடர்பாக போட்டிக்கு பின்னர் ஆர்.சி.பி அணிக்கு முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ஜிதேஷ் சர்மா பேட்டி அளித்தார்.

தோற்றது நல்லது என நினைக்கிறேன்!
அப்போது அவர், “20-30 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம் என நான் நினைக்கிறேன். வெற்றியின் விளிம்பில் இருந்து ஆர்சிபி தோல்வியை தழுவியது குறித்து எனக்கு எந்த பதிலும் இல்லை. எங்களிடம் தீவிரம் இல்லை என்று நினைக்கிறேன்.
ஒருவகையில் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது என நான் நினைக்கிறேன். நேர்மறையான விஷயம் என்னவென்றால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம். வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நல்ல முறையில் மீண்டு வருவோம்” என ஜிதேஷ் தெரிவித்தார்.
முக்கியமான கட்டத்தில் சந்தித்த தோல்வியை நல்லது என்றும், படுமோசமான அணியின் பேட்டிங்கை ஜிதேஷ் பாராட்டியதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் வரும் 27ஆம் தேதியன்று லக்னோ அணியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
