தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்திற்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலை காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணியாக சந்தித்தன. கடந்த முறை ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் 11 தொகுதிகளை கைப்பற்றிய பலம் காரணமாக தனித்துப் போட்டியிட்டது. இறுதிக் கட்டத் தேர்தல் நேற்று நடந்துமுடிந்த நிலையில், நாளை மறுநாள் (டிசம்பர் 23) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு கணிப்புகள் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும், பாஜக 28 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் வெற்றிபெறும் என்றும், பாஜக 27 இடங்களிலும் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 இடங்களிலும், ஜார்கண்ட் அனைத்து மாணவர்கள் சங்கம் 5 இடங்களையும் மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்-சி வோட்டர்ஸ்-ஏபிபி ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 35 இடங்களிலும், பாஜக 32 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 2 இடங்களிலும், மாணவர்கள் சங்கம் 5 இடங்களிலும் மற்றவை 7 இடங்களிலும் வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளது.
�,