எல்லையில் போராடும் ராணுவ வீரரை காப்பாற்றிய ’பஞ்ச தந்திரம்’ : ஜெயராம் நெகிழ்ச்சி!

Published On:

| By christopher

Jeyaram resilience on crazy mohan pancha thanthiram

தமிழ் திரையுலகில் அடுக்கடுக்கான நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போனவர் கிரேஸி மோகன். Jeyaram resilience on crazy mohan pancha thanthiram

அதற்கு அவர் வசன கர்த்தாவாக பணியாற்றிய அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களே சாட்சி.

கிரேஸி மோகன் கடந்த 2019ஆம் ஆண்டு மறைந்த நிலையில், அவர் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று (மே 1) நடைபெற்றது.

இந்த விழாவில் கிரேஸி மோகனின் உற்ற நண்பரும், முன்னணி நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் ஜெயராம் பேசுகையில், “நான் சினிமாவில் கடந்த 37 வருடங்களாக 300 படத்திற்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் உலகில் நான் எங்கு போனாலும் தெனாலி, பஞ்ச தந்திரம் படத்தை குறிப்பிட்டு தான் என்னிடம் பேச ஆரம்பிப்பார்கள்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் பள்ளியில் நடந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்த கமல்ஹாசனை ஒரு செகண்ட் பார்த்து விட முடியாதா என பலமணி நேரம் காத்திருந்திருக்கிறேன். அவருடன் இன்று ஒரே மேடையில் அமர்ந்திருப்பதை பெரும் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

கிரேஸி மோகன் சாருடன் தெனாலி, பஞ்ச தந்திரம் என இரண்டு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

நான் இப்போது உண்மையில் நடந்த கதையை சொல்ல விரும்புகிறேன். ஒரு படப்பிடிப்பிற்காக ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். காஷ்மீரில் இப்போது தாக்குதல் நடந்த ஏரியா மாதிரியான இடம் அது. அங்கு தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இரண்டு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

எனக்கு ஷாட் தொடங்காமல் இருந்ததால் மற்றொரு இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அப்போது கன்(Gun) ராஜேந்திரன் என்று ஒருத்தர் இருப்பார். சினிமாவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் அவரைத் தெரியும். படத்திற்காக டூப்ளிகேட் கன் சப்ளை செய்வார்.

எங்கள் படப்பிடிப்பிற்காக அவர் கன் எல்லாம் செட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவருடன் நானும் இருந்தேன். அப்போது திடீரென ராணுவ அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தார்கள். ”நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களை யார் கன் எல்லாம் எடுத்துக்கொண்டு இந்த இடத்திற்கு வரச்சொன்னது?” என்று கேட்டார்கள்.

நான் நடிகர், படப்பிடிப்பிற்காக இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னேன். கன் எல்லாம் அந்த இடத்திற்கு எடுத்துக்கொண்டு செல்லவே கூடாது. ஆனால் கன் ராஜேந்திரன் நிறைய கன்களை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு சஃபாரி சூட்டோடு உட்காந்திருக்கிறார்.

அந்த ராணுவ அதிகாரிகளில் தமிழ் பேசக்கூடிய அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். உயர் அதிகாரிகளிடம் படப்பிடிப்பிற்காகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி தமிழில் பேசக்கூடிய அந்த அதிகாரி என்னை அழைத்துச் சென்று ஒரு இடத்தில் உட்கார வைத்தார்.

அப்போது அவரிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். மலை உச்சியில்தான் அவருக்கு வேலை. அங்கு 12 அல்லது 15, 20 மணி நேரம் கூட அவருக்கு வேலை இருக்கும். ஒரே இடத்தில் நிற்க வேண்டும். அவர் அணிந்திருக்கும் புல்லட் ப்ரூப் ஆடை, கையில் வைத்திருக்கும் கன், ஹெல்மெட், ஷூ எல்லாம் சேர்ந்து 25 கிலோவுக்கு மேல் இருக்கும்.

15, 20 மணி நேரம் நான் வேலைப் பார்த்த பிறகு நான் தங்கும் இடத்திற்கு சென்று சிரித்துக்கொண்டு தூங்குவதற்கு காரணம் என்ன என்பதைக் காண்பிக்கிறேன் என்று அவர் ஃபோனில் எனக்கு காண்பித்தது ‘பஞ்சதந்திரம்’.

இந்தப் படத்தைத் தினமும் பார்த்து சிரித்துவிட்டுதான் தூங்குவேன் என்று சொன்னார். நம்மளுக்காக எல்லையில் நிற்கிற ஒரு வீரர், தன்னுடைய 15 மணி டென்ஷனை இப்படி தான் போக்குவேன் ரொம்ப நன்றி சார் என்று சொன்னது அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்படிபட்ட வசனங்களையும், வாய்ப்பையும் கொடுத்த கிரேஸி மோகன் சாருக்கு நன்றி” என உணர்ச்சி பொங்க பேசினார்.

தொடர்ந்து, தனது கல்லூரி வாழ்க்கையில் முதன்முறையாக கமல் ஹாசன் குரலில் மிமிக்ரி செய்ததை நினைவுக் கூர்ந்து, மேடையில் இருந்த அவர் முன்னாடியே செய்து காட்டினார் ஜெயராம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share