சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று தெரிகிறது.
பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாமீது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது 1996ஆம் வருடம் அவரது வீட்டில் சோதனை செய்து 21வகையான பல்வேறு பொருட்கள் மற்றும் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 காலணிகள், 250 சால்வைகள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நகரில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்களில் பட்டுசேலைகள், காலணிகள், சால்வை ஆகியவை அழியும் பொருட்களாக இருப்பதால், அதை பொது ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
டி.நரசிம்மமூர்த்தி அனுப்பிய மனுவை வழக்காக ஏற்றுகொண்ட உச்சநீதிமன்றம் இன்று(நவம்பர் 16) விசாரணைக்கு எடுத்து கொண்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தபோது, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சேலை, காலணி, சால்வைகள் எந்த பயன்பாடுகள் இல்லாமல் நாசமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது வீணாகினால் தேசிய பொருளாதார இழப்புமாகும். அதை தவிர்க்க ஏலம் விட வேண்டும் என்றார்.
கருவூலத்தில் உள்ள பொருட்கள் பழையதாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு என பெரும் ரசிகர்கள் உள்ளதால் ஆர்வமாக இந்த பொருட்களை நிச்சயம் வாங்கிக் கொள்வார்கள்.
ஆகையால் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். இவ்வழக்கில் நரசிம்மமூர்த்தி தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்புக்கு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
