ராஜன் குறை
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக அவருடன் 33 ஆண்டுகள் வாழ்ந்தவரும், தினசரி ஜெயலலிதாவின் கட்சி, ஆட்சி நிர்வாகத்திலும் முடிவுகளிலும் பங்கெடுத்தவரும், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கில் தண்டிக்கப்பட்டு நான்காண்டுக் காலம் சிறைவாசம் புரிந்தவருமான சசிகலா தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரால் சிறை செல்லும் முன் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீண்டும் சசிகலா தலைமையை ஏற்க தயாராக இல்லை. அதனால் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை நிறுவிக்கொள்ளும் அவசரத்தில், பதற்றத்தில் சசிகலா விடுதலையை முன்னிட்டு பல காரியங்களைச் செய்துள்ளார். கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டை நினைவில்லமாக திறந்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் சேர்த்து மதுரைக்கு அருகே “கோயில்” ஒன்றை திறந்துவைத்துள்ளார். சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையைத் திறந்து வைத்து, அந்த வளாகத்துக்கு ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இவையெல்லாம் தவிர, ஜெயலலிதா பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.
அண்ணா தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டவோ, சிலைகளைத் திறக்கவோ உரிமை இருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு இது போன்ற மரியாதைகளைச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழக அரசை கண்டிக்க முடியும். அல்லது யார் பொதுநல வழக்கு போட்டாலும் தமிழக அரசு கண்டனத்துக்குள்ளாகும்.
இப்படி சொல்லும்போது அ.இ.அ.தி.மு.க கட்சியினர் இரண்டு விதமான பதில்களை கூறுகிறார்கள். ஒன்று உச்ச நீதிமன்றம் அவரை தண்டிக்கவில்லை; அவர் மீதான குற்றச்சாட்டுகளை Abated என்று சொல்லி ரத்து செய்துவிட்டது என்பது ஒரு வாதம். இரண்டு, அவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் மக்கள் மன்றத்தால் தலைவியாக, தெய்வமாக மதிக்கப்படுகிறார் என்பது மற்றொன்று. இது இரண்டுமே அவர்கள் கட்சி அரசியலுக்கு உதவலாமே தவிர, ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையைப் பெற்றுத் தர முடியாது; கூடாது. இவை தவிர வேறொரு பொதுப்புத்தி சார்ந்த புரிதலும் இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்கிறார்கள்; அவர்கள் மீதான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்கள் நிரபராதிகள் என்று பொருளில்லை என்பதும், அப்படி நிரூபிக்கப்பட்டதால் ஜெயலலிதாவை மட்டும் அரசியல் வரலாற்றிலிருந்து அகற்ற முடியாது என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது.
இவற்றை விவாதிப்போம்.
உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை தண்டிக்காததால் அவர் குற்றவாளி இல்லையா?
ஜெயலலிதாவின் மீதான வழக்கு 1996ஆம் ஆண்டு போடப்பட்டு, இருபது ஆண்டுகள் விரிவாக விசாரணைக்கு உள்ளான வழக்கு. சென்னையில் தொடங்கிய வழக்கு, கர்நாடகாவில் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது; அதில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது; உச்ச நீதிமன்றத்தால் 2015ஆம் ஆண்டு அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பு பிழையானது என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் இறுதியாக அவர் மரணமடைந்த பிறகு 14, பிப்ரவரி 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மரணமடைந்த அவர் நீங்கலாக அவருக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் எண் இரண்டு, மூன்று, நான்கு ஆகிய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தண்டிக்கப்பட்டார்கள். முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் தண்டிக்கப்பட முடியாததால் அவர் மீதான வழக்கு ரத்தாகிவிட்டது. இப்படி வழக்கு Abated என்பதால் அவர் குற்றவாளி இல்லை என்பது பொருளா என்பது முதல் கேள்வி.
இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றம் என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பு வகித்த காலத்தில், 1.7.1991 முதல் 30.4.1996 வரை, அவருடன் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் சேர்ந்து சதி செய்து, அவருடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறையற்ற வகைகளில் அறுபத்தாறு கோடி ரூபாய் சொத்துகளை குவித்தார் என்பதுதான். இதில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி அளித்த அதிகாரம்தான் முக்கியமான காரணம் என்பதும் மற்றவர்கள் அவர் அதை பயன்படுத்தி சொத்து குவிக்க உதவியவர்கள் என்பதும் வெளிப்படை. ஜெயலலிதாவின் பதவி இல்லாவிட்டால் மற்ற மூவருக்கும் இந்தச் சொத்துகளை குவிக்க எந்த ஆற்றலும் கிடையாது என்பதும் தெளிவானது. அதனால்தான் அவர்கள் அவருடைய விலாசத்தையே பயன்படுத்துகிறார்கள்; அவருடைய பினாமியாகச் செயல்படுகிறார்கள். உடந்தையாக இருந்த மூவரும் குற்றவாளி, முதல் குற்றவாளியான ஜெயலலிதா மட்டும் நிரபராதி என்று கூற எந்த வாய்ப்பும் கிடையாது. அவர் இறந்துபோனதால் அவர் மீதான வழக்கு ரத்தாகிவிட்டது என்பது மட்டும்தான் Abated என்பதற்கான பொருள்.
மேலும் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா செய்த ஊழல் தொடர்பான சில கருத்துகளையும் நெஞ்சில் தைக்கும்படி கூறியுள்ளது. பதவிப்பிரமாணம் எடுக்கும்போது கொடுக்கும் உறுதி மொழியை மீறி அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகம் செய்தது அரசியல் நிர்ணய சட்ட த்துக்கு இழைக்கப்பட்ட துரோகம், அதன் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளது,
Corruption is a vice of insatiable avarice for self- aggrandizement by the unscrupulous, taking unfair advantage of their power and
