‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழக பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: நடிகர் விஜய்யின், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் சென்சாரில் சிக்கியுள்ள பிரச்சனையை மையப்படுத்தி, பிரதமர் மோடியை மிகத் தவறாக விமர்சித்து தமிழக காங்கிரஸ் கட்சியி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கும் கருத்துக்கள் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய தணிக்கை வாரியம் சுதந்திரமாக இயங்கும் தனி அமைப்பு. தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் விஜய்யின் படத்துக்கு சான்றிதழ் கிடைத்து விடப் போகிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக, ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்திருப்பதால்தான் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் எப்போதும், தன் முதுகில் உள்ள அழுக்கை பார்ப்பதே இல்லை. ராஜீவ்காந்தி படுகொலையை மையப்படுத்தி ‘குற்றப்பத்திரிக்கை’ எனும் படத்தை இயக்கியிருந்தார் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி. அந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. அப்போது, மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. சோனியா காந்தியின் அழுத்தத்தால் அந்த படத்துக்கு 10 ஆண்டு காலம் வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தலையிட்டப் பிறகே சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்தது. இந்த வரலாறெல்லாம் கிரிஷ் சோடங்கர் என்ற நபருக்கு தெரிய வாய்ப்பில்லை.
சென்சார் போர்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கலைத்துறை மீது காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதும், கலைத்துறையை முடக்குவதும், கலைத்துறையினரை மிரட்டுவதும் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்குத்தான் கை வந்த கலை!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் தேடி அலையும் ராகுல் காந்தி, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார். அதற்காக, கிரிஷ் சோடங்கர் வழியாக விஜய்க்கு ஆதரவாகப் பேசவே, பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்திருக்கிறார்.
‘குற்றப்பத்திரிக்கை’ படத்துக்கு சோனியா காந்தி ஏற்படுத்திய சிக்கலை மறந்துவிட்டு பாஜக மீதும், பாஜக தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பினால் அதன் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பிய கிரிஷ் சோடங்கரை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
