அரசியல், சினிமா, சமூகம் என எல்லா ஏரியாக்களிலும் தலைகாட்டக் கூடியவர் நடிகர் சித்தார்த். மதவாதம், அரச பயங்கரவாதம் என தவறுகள், அநீதிகள் நடக்கிறபோது நேரடியாக பொதுவெளியில் கருத்து சொல்கிற நடிகர்களில் முதன்மையானவர் சித்தார்த். அவர், ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு கூறியிருப்பதாவது…
ஜெய் பீம் படம் பார்த்து முழுவதும் அழுது கொண்டிருந்தேன். என் இதயம் வலிக்கிறது. குற்ற உணர்ச்சியாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தைத் தயாரித்த ஜோ மற்றும் சூர்யாவுக்குத் தலைவணங்குகிறேன். தன்னைப் பற்றி மட்டுமே திரையில் காட்டாத ஒரு படத்தை ஒரு பெரிய நடிகரால் எடுக்க முடியும் என்று சூர்யா நிரூபித்துள்ளார்.
ஒரு முக்கியமான படத்தை உருவாக்கிய இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளம் நடிகையான லிஜோமோல் ஜோஸின் தோள்களில் ஒட்டுமொத்தப் படம் அமர்ந்திருக்கிறது. செங்கேணியின் வாழ்க்கையைப் பற்றி அவரது கண்களே சொல்கின்றன. அற்புதமான பாத்திரம். பாராட்டுகள் மணிகண்டன். ஒவ்வொரு நடிகரும், படக்குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
‘ஜெய் பீம்’ படத்தை நாம் எடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைப் பற்றிய விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தமிழ் சினிமாவுக்கு என்னவொரு வெற்றி. ஜெய் பீம் என்றால் அன்பு. ஜெய் பீம் என்றால் ஒளி.” இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
**-அம்பலவாணன்**
