ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 7) மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மதுபான ஆலைகள், ஓட்டல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அக்டோபர் 5-ஆம் தேதி சோதனையை தொடங்கினர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி வீடு, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பள்ளிக்கரணை பாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஸ்ரீ லெட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அவருக்கு சொந்தமான ஓட்டல்கள், காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்கள், நெருக்கமான நண்பர்கள் வீடுகளில் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெகத்ரட்சகன் அடையாறு வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களில் நேற்று வருமான வரித்துறையினர் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக புள்ளிகள் மீது தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
