முக்கனிகளில் ஒன்றான பலாவின் மணமும் சுவையும் எப்போதும் மனதில் நிற்கும். மஞ்சள் நிறத்தில் ஈரப்பதத்துடன் பளபளக்கும் ஒரு சுளையைப் பிய்த்து வாயில் வைத்த நொடி அடித்தொண்டை வரைக்கும் இனிக்கும். ஊரெங்கும் இப்போது பலாப்பழ வாசம்தான். முழு பலாப்பழம் அதன் தரத்தைப் பொறுத்து விற்பனையாகிறது. ஆசையாக முழு பலாப்பழத்தை வாங்கி வந்தவர்கள் தேவையான சுளைகளைச் சாப்பிட்டுவிட்டு மீதி சுளைகள்கொண்டு கேரள ஸ்பெஷல் பலாப்பழ அல்வா செய்து ருசிக்கலாம். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
**என்ன தேவை?**
பலாச்சுளை – ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது)
வெல்லத்தூள் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – அரை கப்
நெய் – 10 டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, உடைத்த முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பலாச்சுளைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூள் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, மீண்டும் வெல்லக்கரைசலை அடுப்பிலேற்றி ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இதனுடன் அரைத்த பலாச்சுளை விழுது, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். மேலே வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி: நெஞ்செரிச்சல், அஜீரணம்… தீர்வு என்ன?](https://minnambalam.com/public/2021/06/20/1/acidity-and-its-solutions)**
.
