நடிகர் சிம்பு தனது திரைப் பயணத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, 90 ML படத்துக்கு இசையமைக்கவும், பெரியார் குத்து என்ற ஆல்பம் பாடலைப் பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், சிம்புவின் அடுத்த நான்கு படங்கள் பற்றிய அறிவிப்பை அவருடைய மேனேஜரான ஹரிஹரன் கஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.
செக்க சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து தனது 34ஆவது படமாக விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. பழம்பெரும் படத் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம்தான் சமீபத்தில் அஜித் நடித்து வெளியான வீரம், விஜய் நடித்த பைரவா ஆகிய படங்களைத் தயாரித்தது. இந்தப் படத்தை யார் இயக்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தைத் தொடர்ந்து சிம்பு சொந்தமாக ஒரு படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இது சிம்புவின் 35ஆவது படமாகும். இதைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா-2வில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தனது 37ஆவது படமாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.
ஓரிரு நாட்களில் சென்னை திரும்பும் சிம்பு, மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் டப்பிங் வேலைகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த வேலைகள் முடிந்ததும் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் இசை வேலைகளைக் கவனிக்க உள்ளார். அதன் பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்த நான்கு படங்களும் சரியான விதத்தில் நடித்துக் கொடுத்து, அவை வெளியாகும் பட்சத்தில் சிம்புவுக்குத் தமிழ்த் திரையுலகில் ஏற்பட்டுள்ள இடைவெளி மீண்டும் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,