இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவின் அபராமான ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் தான் அடிக்கும் சிக்ஸர்களுக்காக பெரிய ரசிக பட்டாளத்தையே உருவாக்கிவருகிறார். இது சர்வதேசப் போட்டிகளில் என்றால் உள்ளூர் போட்டிகளில் கவனம் ஈர்க்கும் வீரராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உள்ளார். துலிப் டிராபியின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரின், சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரெட் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதோடு இந்திய அணியில் ஆல்ரவுண்டராக சீக்கிரம் இணைவேன் என்று தனது ஆட்டத்தால் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா ரெட் – இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டி லக்னோவில் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ரெட் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ப்ரித்வி ஷா (154), கேப்டன் தினேஷ் கார்த்திக் (111), மற்றும் வாஷிங்டன் சுந்தர் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 483 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ப்ளூ அணி, சிறப்பான தொடக்கம் அமைந்த போதிலும் பின்வரிசை வீரர்கள் ஸ்கோர் செய்யத் தவறியதால், 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஈஸ்வரன் (127), உனத்கட் (83) எடுத்தனர். இந்தியா ரெட் அணியின் கோஹில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
184 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ரெட் அணி, தொடக்க வீரர் ப்ரித்வி ஷா (31), ஹெர்வாத்கர் (8), ஜக்கி (3), தினேஷ் கார்த்திக் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பாபா இந்திரஜித் 59 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில் இந்தியா ரெட் 208 ரன்கள் எடுத்தது.
392 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ப்ளூ அணியின் மனோஜ் திவாரி (38), சுரேஷ் ரெய்னா (45), பார்கவ் பரத் (51) ரன்கள் எடுத்து வெளியேற அந்த அணி 229 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இந்தியா ரெட் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்தியா ரெட் அணி தரப்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்கள் வீழ்த்தி, 130 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
