ADVERTISEMENT

மோடிக்கு நோபல் பரிசா? நான் சொன்னேனா?: டோஜே விளக்கம்!

Published On:

| By christopher

இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு பிரதமர் மோடியே தகுதியானவர் என்று தான் கூறியதாக வெளியாகும் வதந்திகளுக்கு ஆஸ்லே டோஜே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் ஆஸ்லே டோஜே பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு வழங்குவது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்ததாக நேற்று (மார்ச் 17) ஊடகங்களில் செய்தி வெளியானது.

ADVERTISEMENT

அமைதிக்கான நோபல் : மோடி

அந்த பேட்டியில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு தகுதிமிக்க மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

ADVERTISEMENT

இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார்.

போரிடும் உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி.” என்று டோஜே தெரிவித்ததாக செய்தி வெளியானது.

ADVERTISEMENT

மேலும், ”நான் இந்திய பிரதமர் மோடியின் தீவிர ரசிகர். அவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணமாக இருக்கும்” என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது.

இதனை நாட்டில் உள்ள பிரபல முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளும் மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களும் தங்களது தளங்களில் வெளியிட்டன.

உண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அந்த கமிட்டியை சார்ந்த ஒருவரால் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க முடியாது என்றும், ஆஸ்லே டோஜேவின் பேச்சு இந்திய ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஒரு சில ’தரவு சரிபார்ப்பு’ தளங்கள் அறிவுறுத்தின.

அது ஒரு போலிச் செய்தி

இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்லே டோஜே வெளியிட்ட வீடியோ பதிவில், “நான் நோபல் கமிட்டியின் துணைத் தலைவர்.

அமைதி நோபல் பரிசுக்கு மோடி தான் சிறந்த போட்டியாளர் என்று நான் கூறியதாக வந்தது ஒரு போலி செய்தி.

அதைப் பற்றி அதிகம் விவாதிக்க வேண்டாம். அதற்கு அதிக ஆக்ஸிஜனையும் கொடுக்க வேண்டாம். நான் அதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

அந்த ட்வீட்டில் இருந்ததைப் போன்ற எதையும் நான் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்லே டோஜேவின் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் வலுவான போட்டியாளர் பிரதமர் மோடி என்று அவர் கூறியதாக வெளியான செய்தியை அவரே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நோபல் பரிசு அறிவிப்பு எப்போது?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் 9ம் தேதி வரை வெளியாகும், இந்த அறிவிப்புகள் அனைத்தும் nobelprize.org என்ற வலைதளப்பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி!

”சாம்பியன் மீண்டும் எழப்போகிறார்”: ரிஷப் பண்ட் குறித்து யுவராஜ் சிங்

its fake i didnt say modi tough
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share