தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச பயங்கரவாத இயக்கமான ISIS-க்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை, பழனி, சென்னையில் மேலும் 4 பேர், தேசிய புலனாய்வு முகாமையால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளனர். ISIS Recruitment Case: 4 More Arrested in Coimbatore, Palani, and Chennai
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே 2022-ம் ஆண்டு கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பயங்கரவாத இயக்க தொடர்புக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.எஸ்.ஐ-க்கு ஆட்சேர்ப்பு தொடர்பாகவும் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து சென்னை அரபிக் கல்லூரி நிறுவனர் ஜமீல் பாட்ஷா, இர்ஷத் செய்யது, அப்துர் ரகுமான், முகமது உசேன் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அடுத்த கட்டமாக மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை அரபிக் கல்லூரி முதல்வர் முகமது அலி, அரபி கல்லூரி பணியாளர் உக்கடம் ஜவஹர் சாதிக், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா முகமது, சென்னை பாலவாக்கம் சேக் தாவூத் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. கடந்த ஜூன் 18-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கில் மொத்தம் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
