விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ள கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. is virat kohli going to retired after rohit sharma
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மூத்த நட்சத்திர பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த மே 7ஆம் தேதி தெரிவித்தார்.
38 வயதான ரோகித் சர்மா, இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, ஒரு இரட்டை சதம், 12 சதம், 18 அரைசதம் உட்பட 4301 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலிக்கும் விருப்பம்!
ரோகித்தை இந்திய கிரிக்கெட்டின் மூத்த நட்சத்திரமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) நெருக்கமான வட்டாரங்களின்படி, 36 வயதான வீரரான விராட் கோலியும் சமீபத்தில் நீண்ட கால கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான கோலியை விட்டுக்கொடுக்க பிசிசிஐ தயாராக இல்லை என்றும், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உயர் அதிகாரிகள் கோஹ்லியைத் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கோலி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கிரிக்கெட்டில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அவரது ஆக்ரோஷமான கேப்டன்சி, திறமையான பேட்டிங், கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாடு ஆகியவை இந்தியாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு வலிமையான டெஸ்ட் அணியாக மாற்ற உதவின.
கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 7 இரட்டை சதம், 30 சதம், 31 அரைசதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது இந்திய அணி. அந்த நேரத்தில் அனுபவமிக்க சிறந்த பேட்ஸ்மேனான கோலியின் பங்களிப்பு தேவை என பிசிசிஐ கருதுகிறது.
எனவே தான் இன்னும் நம்பமுடியாத அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கும் கோலியை, ஓய்வு குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுமாறு பிசிசிஐ கோரியுள்ளது.