8வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் என அனைவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பரவலாக விவாதிக்கின்றனர். அதாவது, சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு பெரும்பாலும் கமிஷன் பரிந்துரைக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பொறுத்தே அமையும். கடந்த சில மாதங்களாக, பல்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. தரகு நிறுவன அறிக்கைகள், முன்னாள் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் என அனைவரும் வெவ்வேறு எண்களை முன்வைக்கின்றனர்.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது தற்போதுள்ள அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தி அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு multiplier ஆகும். கமிஷன் இந்த காரணியை இறுதி செய்தவுடன், புதிய அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் கண்டறிய இது அனைத்து சம்பள நிலைகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு நிலை-1 மத்திய அரசு ஊழியரின் தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என்று வைத்துக் கொள்வோம். ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.0 ஆக இருந்தால் அது ரூ. 36,000 ஆக உயரும். ஃபேக்டர் 3.0 ஆக இருந்தால், குறைந்தபட்ச அடிப்படை ரூ. 54,000 ஆக உயரும்.
7வது சம்பள கமிஷனில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டது. இது ரூ. 7,000 ஆக இருந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ. 18,000 ஆக உயர்த்தியது. இதனால்தான், ஃபிட்மென்ட் ஃபேக்டரில் ஒரு சிறிய மாற்றம் கூட கையில் கிடைக்கும் சம்பளம், ஓய்வூதியம், அகவிலைப்படி (DA) கணக்கீடுகள் மற்றும் எதிர்கால சம்பள உயர்வுகள் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் சுமார் 1.8 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. அதேபோல, ஒட்டுமொத்த சம்பள உயர்வு 30 முதல் 34% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது 1.8 முதல் 2.46 வரையிலான ஃபிட்மென்ட் ஃபேக்டர் வரம்பைக் குறிக்கிறது. இருப்பினும், பல ஊழியர்கள் 7வது சம்பள கமிஷனின் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டருடன் தங்கள் எதிர்பார்ப்புகளை ஒப்பிட்டு வருகின்றனர். பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, 8வது சம்பள கமிஷன் இதேபோன்ற அல்லது சற்று அதிகமான எண்ணைப் பரிந்துரைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ஊழியர் அமைப்புகள் 3.0 அல்லது அதற்கும் அதிகமான காரணியை வலியுறுத்தும் அதே வேளையில், பெரும்பாலான ஆய்வாளர்கள் இறுதிப் பரிந்துரை 2.0 முதல் 2.5 வரை இருக்கும் என்று நம்புகிறார்கள். இது ஊழியர்களின் எதிர்பார்ப்புகளையும், அரசின் நிதி கட்டுப்பாடுகளையும் சமநிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு, ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது 8வது சம்பள கமிஷனின் மிகப்பெரிய அறியப்படாத விஷயமாக உள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உண்மையில் எவ்வளவு உயரும் என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான எண்ணாகவும் இது உள்ளது.
