செந்தில்பாலாஜி புத்தர், ஆளுநர் வில்லனா? முதல்வர் கடிதத்தால் ஒன்றும் ஆகாது: அண்ணாமலை

Published On:

| By Aara

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி குடியரசுத் தலைவர் முர்முவுக்கு  19 பக்கங்களுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் மெகா புகார் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் இன்று (ஜூலை 10) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

“முதலமைச்சர் ஒரு கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திமுக அரசு தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவ்வளவு இருக்கிறது? அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லாவற்றுக்கும் காரணம்  ஆளுநர்தான் என்று சொல்கிறார் முதலமைச்சர்.

ஆளுநர் ஒரு அமைச்சரை நீக்க முடியுமா என்பதை டெக்னிகலாக விவாதிக்க  காலம் இருக்கிறது. அந்த கடிதத்தைப் படிக்கும்போது செந்தில்பாலாஜியை உத்தமராகவும் புத்தராகவும் ஆளுநரை வில்லனாகவும் காட்டியிருக்கிறார் முதல்வர். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆளுநரை மிகவும் தரக் குறைவாக பேசுகிறார்கள்.  திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எல்லாம் ஆளுநரை   ‘ரவி’ என்ற சொல்லாடலில்தான் அழைக்கிறார்கள். ஆளுநருக்கு  மரியாதையே இல்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநரை  எல்லாவற்றிலும் தலையிட சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இப்போது  முதலமைச்சரின் இந்த கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை” என்றார் அண்ணாமலை.

மேலும் அவர், “ஏற்கனவே நான் ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அதற்காக அவர் வாயை மூடிக் கொண்டு  இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவர் தன் கருத்தைப் பேசலாம்” என்றும் குறிப்பிட்டார் அண்ணாமலை.

வேந்தன்

”தக்காளி இலவசம்”: அறிவிப்பால் அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share