உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை இன்று (ஏப்ரல் 2)அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கொண்டு வந்து ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் இதுவரை 48 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள்/கொலைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தூத்துக்குடியில் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட பண இழப்பால் உடன் பிறந்த தம்பியை அண்ணனே அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) துத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?
அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும். மாண்புமிக்க சட்டமன்றத்தையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
