காங்கிரஸ் உறவை முறிக்க தயாரா?: சாம் பிட்ரோடா கருத்தை குறிப்பிட்டு ஸ்டாலினுக்கு மோடி கேள்வி!

Published On:

| By Kavi

தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல் இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் காங்கிரஸுடனான உறவை முறிக்க தயாரா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்  தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர்.

அமெரிக்காவில் வசித்து வரும் அவர் தி ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்துக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“உலகில் ஜனநாயகத்திற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்கள் போலவும் இருப்பார்கள். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே” என்று அவர் கூறியிருந்தார்.

 

நிறத்தை வைத்து அவர் இப்படி பேசியிருப்பதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “சாம் பிட்ரோடா கூறிய கருத்தால் நான் இன்று மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்த இனவாத மனநிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

என் மீது விமர்சனங்களை வைத்தால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் மக்கள் மீது வைத்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா? இப்படியெல்லாம் பேசுவதற்கு அனுமதி வழங்கியது யார்?” என்று ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் அவர், “திரௌபதி முர்முவைத் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் இவ்வளவு முயற்சி செய்தது என்று நான் நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதன் காரணத்தை இன்று தெரிந்துகொண்டேன்.

தோல் நிறத்தை வைத்தே குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தோற்கடிக்க முனைந்தது” என்று கூறினார்.

தொடர்ந்து ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜம்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “காங்கிரஸ் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல நினைக்கிறது. இதுபோன்ற கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இது சரியா என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா? தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன்.

தமிழ் கலாசாரம் பற்றி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடன் உறவை முறிக்கத் தயாரா? அதற்கான தைரியம் வருமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் : தேர்தல் ஆணையம்!

தீயில் எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்: எங்கே, ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share