இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. ஜாம்பவான் அணிகளின் அதிர்ச்சி தோல்விகள், எதிர்பாராத திடீர் திருப்பங்கள் என இந்த தொடர், தொடர்ந்து சுவாரஸ்யத்துடனேயே பயணிக்கிறது.
ஒருபுறம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை தன்வசம் வைத்திருந்தாலும், மீதமுள்ள 7 அணிகள் 4வது இடத்திற்காக பெரும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
அப்படியான ஒரு போரில், அரையிறுதிக்கு செல்ல வெற்றி மிகவும் அவசியம் என்ற நிலையில், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்ற ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, இறுதி வரை போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஐதராபாத்தில் தனது உலகக்கோப்பை பயணத்தை துவங்கிய பாகிஸ்தான் அணி, முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அதை தொடர்ந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், 2ல் மட்டுமே வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 6வது இடத்தில் உள்ளது. மேலும், உலகக்கோப்பை வரலாற்றிலேயே பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது இதுவே முதல்முறை.
இப்படியான சூழலிலும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?
பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு என்ன?
ஆம் வாய்ப்பு உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில், மீதமுள்ள 3 போட்டிகளில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.
பாகிஸ்தான் vs வங்கதேசம் – அக்டோபர் 31, கொல்கத்தா
பாகிஸ்தான் vs நியூசிலாந்து – நவம்பர் 4, பெங்களூரு
பாகிஸ்தான் vs இங்கிலாந்து – நவம்பர் 11, கொல்கத்தா
முதலாவதாக, இந்த 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் கட்டாயம் வென்றாக வேண்டும். இதன்மூலம், பாகிஸ்தான் 10 புள்ளிகளை பெறும்.
வெற்றி மட்டுமல்ல.., தோல்வியும் முக்கியம்!
ஆனால், அந்த அணி அரையிறுதிக்கு செல்ல இது மட்டும் போதாது. மற்ற அணிகளின் தோல்வியும் பாகிஸ்தானுக்கு மிக முக்கியம்.
குறிப்பாக ஆஸ்திரேலியா அடுத்து விளையாடவுள்ள 4 போட்டிகளில், 3ல் தோல்வியடைய வேண்டும்.
அதேபோல, நியூசிலாந்து அணி அடுத்து விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
மறுபுறத்தில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆணிகள் தங்களது அடுத்த 4 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு நடந்தால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் என 4 அணிகளும் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும். அதன்பின், பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
ஒருவேளை, ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலோ, நியூசிலாந்து அணி 1 போட்டியிலோ, இலங்கை மற்றும் ஆப்கான் அணி 3 போட்டிகளிலோ வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, மீதமுள்ள 3 போட்டிகளில் பாகிஸ்தான் அணி அபார வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில், அந்த அணி அரையிறுதிக்கு செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது என்றே கூற வேண்டும்.
தற்போது, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் பாதுகாப்பாக உள்ள நிலையில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட மற்ற அணிகள் 2 இடங்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்றன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் பலி!
ஹெல்த் டிப்ஸ்: சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களால் இவ்வளவு நன்மைகளா?