தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் களம் கண்ட நிலையில், “என்னையும் திருநெல்வேலி தொகுதியையும் பிரித்துப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை போட்டியிட உள்ளன.
எதிர்க்கட்சியான அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக, தமாக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற உள்ளன. கூட்டணி உறுதியான நிலையில், எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று (ஜனவரி 29) திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரனிடம், “திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “திருநெல்வேலி தொகுதி மக்கள் என் உடன் பிறந்த சகோதரர்கள் போல… என்னை அவர்களுடைய வீட்டில் இருக்கும் பிள்ளை போலப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னையும் திருநெல்வேலி தொகுதியையும் பிரித்துப் பார்க்க முடியாது” என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
