அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி பாஜக அரசு பழிவாங்குவதாக அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். is modi a1 accused : raghupathi attack annamalai
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கடந்த 13ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
இந்த ஊழலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார் அண்ணாமலை.
இதற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தடையை மீறி இன்று (மார்ச் 17) போராட்டத்திற்கு வந்த அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன்,வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
பாஜகவின் அடியாள் அமலாக்கத்துறை! is modi a1 accused : raghupathi attack annamalai
அப்போது அவர் பேசுகையில், “பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பேசிய மோடி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை பழிவாங்க மாட்டோம்’ என்று தெரிவித்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுக் கட்சி ஆட்சிக்கு ஒன்றிய பாஜக அரசு தொல்லை தந்து வருகிறது. மாற்றுக்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.
பாஜகவின் அடியாட்களாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை அவர் பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறார்.
மாற்றுக் கட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறையால் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் புனிதர்கள் ஆக்கி, வழக்கு முடிக்கப்படுகிறது.
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸில் இருந்த ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோர் பாஜகவில் சேர்ந்ததும் அவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் காணாமல் போய்விட்டன.
பாஜகவினரின் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதையும் மீறி இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அண்ணாமலை, டாஸ்மாக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏ1 குற்றவாளி என சொல்லியிருக்கின்றார். முழுக்க முழுக்க இது சட்டவிரோதமான செயல்.

பாஜகவினர் மீது நடவடிக்கை இல்லையே ஏன்? is modi a1 accused : raghupathi attack annamalai
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தால், சிபிஐ – அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைக்கிறோம் என்று பாஜக பேரம் பேசியதை ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சராக இருந்த மணிஸ் சிசோடியா அம்பலப்படுத்தினார்.
நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என்று அமலாக்கத்துறைக் கேட்டது என்று நீதிமன்றத்திலே செந்தில் பாலாஜியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அதானியுடைய செல் நிறுவனத்திலே முதலீடு செய்யப்பட்டதில் ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தமானது? அந்த பணம் எங்கிருந்து வந்தது? இதுபற்றி அமலாக்கத்துறை ஏன் விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை? பிரதமர் மோடி அமலாக்கத்துறையிடம் அதானி செல் விவகாரத்திலே நடவடிக்கை எடுக்க ஆணையிடுவாரா?

கர்நாடகாவிலே பாஜக முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் ஆட்சியிலே 40 சதவிகித கமிஷன் ஊழல் என குற்றச்சாட்டு எழுந்தபோது, சட்டவிரோத பணம் பரிமாற்றம் என்று சொல்லி மோடியின் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இதற்கெல்லாம் காரணமாக உள்ளவர் மோடியை என்று, அவரை நாங்கள் A1 என்று சொன்னால், அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா?
எனவேதான், இன்றைக்கு அமலாக்கத்துறையை அவர்கள் அரசியல் பழிவாங்கல் கருவியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
டாஸ்மாக் புகார் – முதல்வருக்கும் சம்பந்தமில்லை!is modi a1 accused : raghupathi attack annamalai
டெல்லி பாணியிலே இங்கு அரசியல் செய்து விடலாம் என பாஜக கனவு காண்கிறது. தமிழக மக்கள் விழிப்புடன் இருப்பவர்கள். பாஜகவின் எந்த பாச்சாவும் இங்கு செல்லுபடியாகாது.
நம்முடைய பிள்ளைகளுக்குக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2192 கோடியை, பாஜக அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நமக்கு தர மறுத்து இருக்கிறது. இதுபோல 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.3000 கோடி தமிழ்நாட்டு தர மறுத்து இருக்கிறது. இதையெல்லாம் கண்டித்து தமிழகத்தில் பாஜக கட்சி போராட தயாரா? ஆனால் போராட அவர்கள் தயாராக இல்லை. ஏனென்று சொன்னால் தமிழக மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் கேட்டு மாட்டிகொண்டார். இதுதான் அமலாக்கத்துறையின் லட்சணம். அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் உத்தமர் கிடையாது.
தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கை இவற்றையெல்லாம் முன்னெடுத்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே போராடுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு நாடாளுமன்றத் தொகுதிகளை குறைக்க வேண்டும், தொகுதிகளை குறைத்துவிட்டால், இவர்களின் குரல் வலு குறையும் என தப்புக் கணக்கு போடுகிறார்கள். எனவே தொகுதி மறுசீரமைப்பால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்களோ அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக முதலமைச்சர் இருக்கிறார்கள். இதனால்தான் பாஜகவிற்கு நமது முதலமைச்சர் மீது தனி கோபம்.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முறைகேடுக்கு ஆதாரம் உள்ளதா? எதையும் சந்திக்கத் தயார் என்று செந்தில்பாலாஜி தெளிவாக தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஊழலே நடைபெறவில்லை; இதில் முதல்வரை சிக்கவைக்க முடியாது மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை” என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
