சீனாவின் மக்கள்தொகையை மிஞ்சிவிட்டதா இந்தியா?

Published On:

| By christopher

சீனாவின் மக்கள் தொகையை இந்தாண்டின் மத்தியில் இந்தியா மிஞ்சி முதலிடம் பிடிக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் ’உலக மக்கள் தொகை 2023’ அறிக்கையை இன்று(ஏப்ரல் 19) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “இந்த ஆண்டின் மத்தியில் சீனாவின் 1.4257 பில்லியனுடன் (142.57 கோடி) ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.4286 பில்லியனாக(142.86 கோடி) இருக்கும். அதன்படி மக்கள் தொகையில் 29 லட்சம் பேருடன் இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும். 34 கோடி மக்கள்தொகையுடன் அமெரிக்க 3வது இடத்தில் இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், இந்தியாவும், சீனாவுமே 75 சதவீதம் மக்கள் தொகையைகொண்டிருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும் சில செய்திகளில் இந்தியா மக்கள்தொகை இப்போதே சீனாவை முந்தி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மக்கள் தொகை குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐ.நா. அதிகாரிகள் கூறுகையில், ”மக்கள் தொகையில் இந்தியா, சீனாவை தற்போது பின்னுக்கு தள்ளிவிட்டதாக துல்லியமாகக் கூற முடியாது. ஏனெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு எடுத்தது.

ADVERTISEMENT

அதன்பின்னர் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021 ஆண்டு நடந்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. அது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. எனினும் இந்த ஆண்டின் மத்தியில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா தாண்டிவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.

முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நாடுகளில் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் “கடந்த அறுபது வருடங்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்தது. இனி, இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, “அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேலையின்மை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த தரவுகளை மறைக்க அரசாங்கம் வேண்டுமென்றே மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்துகிறது.” என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநரை வரவேற்று சாதி பேனர்கள்: அதிரடியாக அகற்றம்!

தமிழ்நாட்டின் நிதி நிலை : முன்னாள் தலைமைச் செயலாளரின் ஆலோசனைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share