நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “கங்குவா”. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் 43-வது படமான “புறநானூறு” திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணத்தினால் தற்போது அந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் சூர்யா 44 படம் ஒரு மியூசிக்கல் கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படங்கள் என்றாலே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளராக இருப்பார். அந்த வகையில் சூர்யாவின் 44-வது படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் அவர்கள் தான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் குறித்து ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் சூர்யாவின் 44வது படத்தில் “ஒரு டான்ஸ் மெட்டீரியலுக்கு பாட்டு வைங்க அண்ணா” என்று சந்தோஷ் நாராயணனை டேக்ஸ் செய்து பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சந்தோஷ் நாராயணன் லைக் செய்தது மூலமாக சூர்யாவின் 44வது படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என்பதை உறுதி செய்து இருக்கிறார்.
சூர்யா – சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் முதல் படம் சூர்யா 44 என்பதும் குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் சூர்யா 44 படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…