பீகாரில் இருக்கும் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு பாஜக வெற்றி பெற முயல்கிறதா என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹில்லா சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து கோவையில் இன்று (ஜூலை 25) செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா,”ஒன்றிய பாஜக அரசு பீகார் மாநிலத்தில் குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகப்பெரிய அதிருப்தியை பீகாரில் ஏற்படுத்தி உள்ளது. தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் கடுமையாக தேர்தல் ஆணையத்தின் இந்தப் பணியை எதிர்த்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் இது குறித்த கூச்சல் குழப்பம் நடைபெற்று வருகிறது. இதேபோல் நாடு முழுவதும் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பல்வேறு வகையான ஆவணங்களை இந்த திருத்தத்திற்கு கேட்கிறார்கள். இது ஆட்சேபகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு வகையில் என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை மறைமுகமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர தேர்தல் ஆணையத்தை கையில் கொண்டுள்ளதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பீகாரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த வாக்காளர் திருத்த பணி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் செய்யப்பட வேண்டும்.
மராட்டிய மாநிலத்தில் திடீரென புதிதாக லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது பீகாரில் இருக்கும் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு பீகார் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இதில் மிக விழிப்புணர்வுடன் இருந்து பீகாரில் நடைபெற்று வருவது போன்று ஒரு வாக்காளர் திருத்த பணி இங்கு நடைபெறக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளையும் கண்காணிப்புகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
