வரதட்சணை புகாரில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகனை நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று (ஏப்ரல் 21) விசாரணைக்கு ஆஜராகவில்லை. irrutu kadai halwa owner son in law
திருநெல்வேலியில் புகழ்பெற்ற அல்வா கடையான இருட்டுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா திருமணம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
தமிழ்நாடே திரும்பி பார்க்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் நடந்து 50 நாட்கள் கூட ஆகாத நிலையில் தனது மாமனார் குடும்பத்தினர் இருட்டுக்கடை அல்வா பிசினஸை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்துவதாக நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயாருடன் வந்து புகார் அளித்திருந்தார்.
இருட்டு கடையை எழுதி தரவில்லை என்றால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவேன் என்று மாமனார் வீட்டில் மிரட்டுவதாகவும், தாலி கட்டிய அரை மணி நேரத்தில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வருவதாகவும் கனிஷ்காவும் அவரது தாயார் கவிதாவும் கூறினர்.
இதற்கு கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார். இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதாவுக்கு மனநோய் என்றும், கனிஷ்காவின் நடத்தை சரியில்லை… அதாவது இரவு நேரங்களில் அடிக்கடி போன் பேசுவதாகவும், நாளொன்றுக்கு 5,6 மணி நேரம் வீட்டில் இருப்பதில்லை வெளியே சென்று விடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கனிஷ்காவின் புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று பல்ராம் சிங்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 21) காலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்தாரரான கனிஷ்கா ஆஜராகி விளக்கமளித்தார்.
ஆனால் காலை 11 மணிக்கு பல்ராம் சிங் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை.
அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி கோவையில் பல்ராம் சிங்கிற்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் அவரால் இன்றைய தினம் ஆஜராக முடியவில்லை என்று கூறி 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஒருவேளை இந்த 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைத்தால் பல்ராம் சிங் ஆஜராக தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வேறுவொரு தினத்தில் ஆஜராகமாறு சம்மன் அனுப்ப போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கனிஷ்கா தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல்ராம் சிங்கிற்கு போஸ்டலில் சம்மன் அனுப்பியதோடு, போலீசார் நேரிலும் சென்று சம்மன் கொடுத்தனர். அதன்படி திங்கள் கிழமை காலை 11 மணிக்கு நேரில் வருவதாக சொல்லியிருந்த பல்ராம் சிங் இன்று நேரில் ஆஜராகவில்லை” என்று கூறினார். irrutu kadai halwa owner son in law
