விமர்சனம்: இரவின் விழிகள்!

Published On:

| By Minnambalam Desk

காண்போரைக் கவருமா ?

அடர்ந்த காட்டில் இரவில் இருசக்கர வாகனத்தில் போகும்போது, சாலையின் நடுவில் ஒருவன் நிற்க அவன் மீது மோதாமல் வண்டியைத் திருப்பும்போது பள்ளத்தில் உருண்டு விபத்து நடக்க , அடிபட்டு விழுந்தவனை தூக்கிச் சென்று கொடூரமாக வெட்டிக் கொல்கிறான், முகமூடி போட்டுக் கொண்டு சாலையில் நின்ற அந்த ஆள்.

ADVERTISEMENT

அடுத்து அதே மாதிரி ஒரு பெண்ணையும் கொல்கிறான்.

முதலில் கொல்லப்பட்டவனின் இரு சக்கர வாகனத்தை ஒருவன் ஓட்டிக் கொண்டு போக, அவனை சந்தேகக் கேசில் பிடிக்கும் இரண்டு போலீஸ்காரர்கள்( சேரன் ராஜ் , சிசர் மனோகர்) இருவரும் காட்டுக்குள் வருகிறார்கள்;

ADVERTISEMENT

யூ டியூபில் அதிக பார்வையாளர்களைப் பெறும் வீடியோக்களை போடும் ஒரு ஜோடி ( மகேந்திரன் – நீமா ராய்) அவர்களது நண்பர்கள் சிலர் என்று ஒரு குழுவாக இயங்குகிறார்கள்.

கொலை நடக்கும் காட்டுக்குள் இந்த ஜோடி காரில் செல்ல, எதிரே அந்த முகமூடி அணிந்த கொலைகாரன் சாலையில் நிற்க , அவன் மேல் மோதாமல் வண்டியைத் திருப்பும் முயற்சியில் கார் விபத்தில் சிக்கி இருவரும் அடிபட, அவர்களையும் தூக்கிப் போய் மரத்தில் கட்டி வைத்து கொடூர கோடாரி ஆயுதத்தால் முகமூடி நபர் கொலை செய்ய முயல , அவன் யார்? ஏன் இந்தக் கொலைகள் என்பதே,

ADVERTISEMENT

மகேந்திரா ஃ பிலிம் ஃ பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, சிக்கல் ராஜேஷ் எழுதி இயக்கி வில்லனாக நடிக்க , நீமா ராய் , நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் நடிப்பில் வந்திருக்கும் இரவின் விழிகள்

அடர்ந்த காடுகளில் பல காட்சிகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் அந்த பின்புலம் ஈர்க்கிறது . பாஸ்கரின் ஒளிப்பதிவில் பகலில் எடுத்து இரவு போலக் காட்டப்படும் காட்சிகளை விட , பகலாகவே காட்டப்படும் காட்சிகள் சிறப்பு.

அசாரின் இசையில் வரும் பாடல்கள் இந்தப் படத்தில் தனித்து சிறப்பாகவே இருக்கிறது . பாடல் காட்சிகளை நன்றாக எடுத்து இருக்கிறார்கள் .. ஆனால் பெண்களின் உடலில் சென்சார் போர்டு அங்கங்கே அழித்து மறைக்கும் அளவுக்கு ஆபாசம்.

பாசமுள்ள அண்ணனாக நடிக்கும் இயக்குனர் சிக்கல் ராஜேஷுக்கு ம் அவரது தங்கையாக நடிப்பவருக்கும் இயல்பான காட்சிகளில் நடிப்பு, செல்ஃப் எடுக்க்கவில்லை என்றாலும் சோகக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்கள்.

நாயகன் நாயகி உட்பட படத்தில் வரும் நடிகர்கள் எல்லோரும் செயற்கையாக நடிக்கிறாரார்கள். சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக இருந்தால் ஓகே. இலுப்பைப் பூவே இல்லாத ஊருக்கு ஏதோவாக இருந்தால் எப்படி?

நாடகத்தனமாக பல காட்சிகள் போகின்றன

‘விபச்சாரம் செய்யும் பெண் கூட அதை ஓர் அறைக்குள் மறைவில் செய்கிறாள் . ஆனால் குடும்பப் பெண்கள் என்று சொல்பவர்கள் ஆபாசமாக உடம்பு காட்டி ஆடி அதை வீடியோ எடுத்து போடுகிறார்கள் இன்னும் சில பேர் வீடியோவை வைரல் ஆக்கி தாங்கள் பணம் சம்பாதிக்க மற்றவர்களை டிஸ்டர்ப் செய்து, தொந்தரவு செய்து , பயமுறுத்தி ஆபத்துக்கு உள்ளாக்கி அப்பாவிகள் மரணம் அடையவும் காரணமாகி விட்டு, அந்தக் குற்ற உணர்சசியே இல்லாமல் அடுத்த வீடியோவுக்குப் போகிறார்கள் .

அவர்களை சும்மா விடக்கூடாது” என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் கதை .ஆனால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்ற தெளிவும் நேர்த்தியும் இல்லை.

பாதிக்க்கப்பட்ட நபர் கொலை செய்யும் செய்ய முயலும் ஆட்கள் எல்லாமே அந்த பாதிப்புக்கு காரணமானவர்களா? இல்லை மற்ற மனசாட்சி இல்லாத எல்லா யூ டியூபர்களும் உண்டா? அவர்கள் எல்லாமே கொலை செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள்தானா ? என்ற விஷயத்தில் தெளிவு இல்லை.

ஒவ்வொரு முறையும் கொலைகாரன் சாலையில் நிற்க வாகனத்தில் வரும் நபர்கள் யாவரும் அவன் மேல் மோதக கூடாது என்ற நல்ல எண்ணத்தில் காரைத் திருப்பி அதனால் விபத்தில் சிக்குகிறார்கள் . எனில் அவர்கள் அடிப்படையில் எவ்வளவு நல்லவர்கள்? சுயநலமாக எண்ணி வண்டியை விட்டு ஏத்தி இருந்தால் கொலைகாரன் செத்துப் போயிருப்பானே ? எனவே அப்படிப்பட்ட நல்லவர்களை கொலை செய்யும் வில்லனுக்கு என்ன தண்டனை?

மற்றவர்களை தண்டிக்கவும் சமூகத்தைக் கேள்வி கேட்கவும் அவனுக்கு என்ன தகுதி?

கிளைமாக்ஸ் காட்சியில் பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டே இருக்கிறார் வில்லனாக நடிக்கும் இயக்குனர். முன்பே சில படங்களில் சொல்லப்பட்ட இந்தக் கதையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதில் அவருக்கு மகா குழப்பம்

படத்தை எப்படி முடிப்பது என்பதிலும் தெளிவும் சொன்ன கதைக்கு ஏற்ற நேர்த்தியும் இல்லை.

இரவின் விழிகள் … மாலைக்கண்

ராஜ் திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share