இந்த மாதிரி சேதி வந்து ரொம்ப நாளாச்சு. அதனால் உண்மையாகவே இருக்கும் என்று நம்புவோம்
‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குனர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். (இந்த வாக்கியம் இல்லாவிட்டால் கதாநாயகியின் போட்டோ வைக்க முடியாதே)
‘இரவின் விழிகள்’ படத்தின் படப்பிடிப்பின்போது சவாலான திகில் நிறைந்த சம்பவங்களை நேரடியாக படக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். அப்படி ஒரு சம்பவத்தை சந்தித்த திகில் இன்னும் கூட விலகாத நிலையில் அது பற்றி விவரிக்கிறார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.
“இப்படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்த போது நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த காட்டுப்பகுதியில் கொஞ்சம் உள்நோக்கி இன்னும் புதிதாக ஏதாவது லொகேஷன்கள் கிடைக்கிறதா என தேடியபடி படக்குழுவுடன் சென்றோம். அங்கே ஒரு குகை ஒன்று தென்படவே அதற்குள் சென்று காட்சிகளை படமாக்க முடிவு செய்தோம். அதற்கு இன்னும் லைட்டிங் மற்றும் ஜெனரேட்டர் போன்ற உபகரணங்கள் தேவைப்பட்டதால் படக்குழுவினரில் இருந்து இரண்டு பேரை அவற்றைக் கொண்டு வருவதற்காக அனுப்பி வைத்தோம்.
இதற்கிடையே குகைக்குள் சில காட்சிகளை படமாக்குவதற்காக கொஞ்ச தூரம் சென்று காட்சிகளைப் படமாக்கினோம். அதே சமயம் உபகரணங்களைக் கொண்டு வருவதாக சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று அவர்களைத் தேடி நாங்கள் குகையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சித்தோம். ஆனால் அந்த குகையில், எந்த வழியாக நாங்கள் சென்றோம், திரும்பி எந்த பக்கம் போவது என எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒரு வழியாக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் போராடி அந்த குகையை விட்டு வெளியே வந்தோம்.
இன்னொரு பக்கம் படப்பிடிப்பு உபகரணங்களை கொண்டு வர சென்றிருந்த அந்த இரண்டு நபர்களும் திரும்பி, மீண்டும் குகைக்கு வருவதற்கு வழி தெரியாமல், அங்கிருந்த ஊர் மக்கள் சிலரை உதவிக்கு அழைத்துக் கொண்டு இந்த குகைப்பகுதியை நோக்கி வந்தார்கள். வழியில் எங்களைப் பார்த்ததும் உடன் வந்த ஊர்மக்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்? இது ஆபத்தான பகுதி… காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமாக உலா வரும் இடமாயிற்றே என்று கூறியதும் எங்களுக்கு இன்னும் பயம் அதிகமானது.
அதன்பிறகு மீண்டும் அந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறும் வரை யாரும் எந்த சத்தமும் காட்டாமல் நடந்து வாருங்கள்.. இல்லையென்றால் சத்தம் கேட்டு வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உண்டு என எச்சரித்ததால் யாரும் எதுவும் பேசாமல் திகிலுடனேயே அந்த பகுதியைக் கடந்து, இரவு எட்டு மணிக்கு ஊருக்குள் திரும்பினோம்.
காட்டுக்குள் வழிபடும் கருப்பண்ண சாமியை இந்தக் கதையுடன் பிணைத்து உருவாக்கியுள்ளோம். அதற்கேற்ற மாதிரி அந்த பகுதி மக்களும் பங்கேற்க ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்றையும் அங்கே படமாக்கினோம். “என்றார்.
சம்பவம் போல படமும் திகிலா இருந்தா நல்லது
— ராஜ திருமகன்
