‘இரவின் நிழல்’ பட தடை வழக்கு- நீதிமன்றம் சொன்னது என்ன?

Published On:

| By Gracy

நடிகர் பார்த்திபன் நடித்து வெளியாக இருக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் பார்த்திபன், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. கடந்த மாதம் வெளியாவதாக இருந்து பின்பு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் படம் இது. வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளையும் படம் பெற்றது.

இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நவீன் எண்டர்பிரைசஸ் நிறுவனர் பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘விருது பெறும் நோக்கத்துடன் இந்த படத்தை தனது அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி என் நிறுவனத்திடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கினார். அதில் வர வேண்டிய வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை இன்னும் தரவில்லை. இதனால், வாடகை பாக்கியை தராமல் இந்த மாதம் 15ம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் இயக்குநரான மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆதிரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share