இயக்குநர் அமீர் இயக்கத்தில் தயாரிக்கப்படும் படங்களின் தலைப்புகள் அவரது முதல் படமான மெளனம் பேசியதே தவிர்த்து மற்ற படங்கள் விவாதத்திற்கும், விமர்சனத்துக்கும் உரியதாகவே இருந்து வருகிறது.
2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தின் விளம்பர போஸ்டரில் காவியும் – கறுப்பும் சரி விகிதத்தில் இருந்தது. இதுசம்பந்தமாக அப்போது அமீரிடம் மதம், இறைநம்பிக்கை நிறைந்த படமா எனக் கேட்கப்பட்டது.
இதற்கு “இவை இரண்டையும் தவிர்த்துவிட்டு சினிமா திரைக்கதை எழுத முடியாது” என்றார் அமீர் .
2007ல் பருத்திவீரன் படத்தின் தலைப்புக்கு அலங்காநல்லூர் பருத்திவீரன் குடும்பத்தினரால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தயாரித்ததால் எதிர்ப்புகள், சலசலப்புகள் இல்லாமல் போனது.
10 வருடங்களுக்கு பின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்கிற பெயரில் அமீர் படம் இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியானபோது மீண்டும் சர்ச்சைக்குரிய தலைப்பில் படமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கிறார். படத்துக்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர்.
https://twitter.com/jsmpicture/status/1738793296405869044
யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்பந்தமாக இயக்குநர் அமீரிடம் கேட்ட போது, “இந்திய அரசியல் மதத்தை கச்சாப்பொருளாக்கி கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீவிரமான இறைநம்பிக்கையுள்ளவன் நான். அதே நேரம் எந்தவொரு கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவன் அல்ல. எனது படைப்புகளும் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கார்த்தி சிதம்பரத்தின் ரூட் க்ளியர்: கிறிஸ்துமஸ் விழாவில் உற்சாகம்!
