ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் இன்று (ஜூன் 12) மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெறுவார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவுகிறது.
முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஷ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.
முதன்முறையாக 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை நான்கு பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை – அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிப்பரப்பு உரிமை என நான்கு பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த முறை தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமங்களுக்கான வியாபாரம் ரூ.50,000 கோடியைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனத்தினர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பங்கேற்க இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனங்கள் பிசிசிஐ அமைப்பிடம் தலா ரூ.29.50 லட்சம் கட்டணத்தையும், விண்ணப்பத்தையும் அளித்துள்ளன. ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் இன்று (ஜூன் 12) மும்பையில் நடைபெற இருக்கிறது. இதில் முகேஷ் அம்பானி மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற கடும் முனைப்பு காட்டுவார்கள் எனவும் இவர்களில் ஒருவர் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
**-ராஜ்**
.