ஐபிஎல் லைவ் யாருக்கு?

Published On:

| By admin

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட்டில் பத்து அணிகள் விளையாட இருக்கும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் 50,000 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முன்னணி நிறுவனங்கள் நடைபெறவிருக்கும் ஏலத்தில் கலந்துகொண்டு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.
கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தைப் பெற்று தருவது ஐபிஎல் போட்டியாகும். இதனால் ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தைப் பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். தற்போது ஐபிஎல் போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது.
அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16,347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையைப் பெற்று இருந்தது. அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8,200 கோடிக்குப் பெற்று ஒளிபரப்பியது.
இந்த நிலையில் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு உரிமையை வழங்கும் ஏலம் நடைமுறை இந்த வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் மே மாதத்தில் ஏலப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் விளையாடுவதாலும், ஐபிஎல் போட் டிக்கான மதிப்பு உயர்ந்து வருவதாலும் ஒளிபரப்பு உரிமத்துக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி ஒளிபரப்பு உரிமம் மதிப்பு ரூ.40,000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது நிபுணர்களின் கூற்றுப்படி ரூ.50,000 கோடி வருமானம் கிடைக்கும் என்று கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.
ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியா நிறுவனம், சோனி பிச்சர்ஸ் நெட்வொர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share