ஐபிஎல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி?

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை நிர்ணயிக்கும் தகுதி சுற்றில் டெல்லி – ஐதராபாத் அணிகள் இன்று (நவம்பர் 8) இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. சாம்பியன் யார் என்பதை அறிய இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதில் அபுதாபியில் இன்று (நவம்பர் 8) நடக்கும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடரின் தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி இப்போது தடுமாறுகிறது. சமீபத்திய ஆட்டங்களில் தொடக்கம் மோசமாக அமைந்துள்ளது. பிரித்வி ஷா கடந்த ஏழு ஆட்டங்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதுபோல் மிடில் வரிசை பேட்டிங்கிலும் நிலைத்தன்மை இல்லை. இவற்றை சரிசெய்தால் தான் வலுவான பந்துவீச்சை கொண்ட ஐதராபாத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியும். அதனால் ஷிகர் தவான், ரஹானே, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஸ்டோனிஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தவிர காஜிசோ ரபடா (25 விக்கெட்), அன்ரிச் நோர்டியா (20 விக்கெட்) உள்ளிட்டோர் ரன்களை வாரி வழங்கினர். அவர்களும் அதற்கு பரிகாரம் தேட வேண்டி நெருக்கடியில் உள்ளனர்.

அதே நேரம் தொடக்கத்தில் தடுமாறிய முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி முக்கியமான தருணத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வெளியேற்றுதல் சுற்று உட்பட கடைசி நான்கு ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை குவித்த ஐதராபாத் அணிக்கு பந்து வீச்சே பிரதான பலமாகும். கடைசி மூன்று ஆட்டங்களில் எதிரணிகளை 150 ரன்களுக்கு மடக்கியதே அதற்கு சான்று. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (19 விக்கெட்டுடன் ஓவருக்கு சராசரி 5.30 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்), வேகப்பந்து வீச்சாளர்கள் சந்தீப் ஷர்மா (13 விக்கெட்), டி.நடராஜன் (16 விக்கெட்), ஜாசன் ஹோல்டர் (13 விக்கெட்) ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசி அசத்துகிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 546 ரன்), வில்லியம்சன் (250 ரன்), மனிஷ் பாண்டே (404 ரன்) நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஆடாத விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த இரு லீக் ஆட்டங்களிலும் ஐதராபாத் அணியே வாகை சூடியிருக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் 219 ரன்கள் குவித்து அதன் மூலம் டெல்லியை 131 ரன்னில் சுருட்டியது. இதனால் ஐதராபாத் அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

பனிப்பொழிவின் தாக்கம் இரண்டாவது பேட்டிங்குக்கு சுலபமாக இருப்பதால் டாஸ் வெல்லும் அணி இரண்டாவது பேட்டிங் செய்யவே விரும்பும். அபுதாபியில் கடைசியாக நடந்த 6 ஆட்டங்களிலும் இரண்டாவது பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அல்லது டெல்லி அணி முதல்முறையாக இறுதிச்சுற்றை எட்டி வரலாறு படைக்குமா?

மொத்தத்தில் வலுவான அணிகள் சந்திப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share