செவிலியரே மருத்துவமனையின் உபசரிப்பு – கேரிலேஃபெட்.
அவரின் கூற்றுப்படி உபசரிப்பாகவும், உயிராகவும் வாழ்ந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்ததினம் இன்று. இதுவே உலகச் செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
‘செவிலியர்தினம்’ 1953ஆம் ஆண்டு தொடங்கியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுகாதாரத்துறையில் அதிகாரியாக இருந்த டாரதி சுதர்லாண்ட் இந்த நாளை முன்மொழிந்தார்.
மேலும், அமெரிக்க அதிபதியாக இருந்த டுவைட் டி ஐசனோவர் இந்நாளைப் பிரகடனப்படுத்தினார். 1965இல் உலகச் செவிலியர் அமைப்பு முதன்முதலில் இந்நாளைக் கொண்டாடியது.
செவிலியர் சேவையில் ஒரு முக்கியமான உலகத் தலைவராக விளங்கிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தைக் கொண்டாடும்விதமாக, 1974ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 12ஆம் தேதியில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1854-56 காலகட்ட கிரிமியன் போரில் குற்றுயிரும் கொலையுயிருமாகப் போராடிக்கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.
நைட்டிங்கேல் தன் கையில் ராந்தல் விளக்கை கொண்டே எல்லோருக்கும் மருத்துவம் பார்த்தார். இதனால் அவரை ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று அனைவரும் பாராட்டிக் கொண்டாடினர்.
ஒரு சுகாதார அமைப்பின் தாங்குதிறன் என்பது நோயெழுச்சி, இயற்கைப் பேரிடர் அல்லது போர் போன்ற எந்த ஓர் அவசர நிலையிலும் உடனடியாகச் செயல்பட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப வினையாற்றி தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் திறன் ஆகும்.

உடலியல், உளவியல், சமூகவியல் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு நோயாளிகளுக்குச் சேவை செய்வதற்கு ஏற்றவாறு செவிலியர்கள் சிறந்த பயிற்சியையும், கல்வியையும், அனுபவத்தையும் பெறுகின்றனர்.
வேலைபளு மிக்க மருத்துவர்கள் நோயாளிகளுடன் இருக்கக்கூடிய நேரம் மிகக் குறைவானதே. ஆனால், இருபத்து நான்கு மணி நேரமும் செவிலியர்கள் நோயாளிகளுடனே இருந்து அவர்களைக் கவனிக்கின்றனர்.
நோயை மேற்கொள்வதிலும், மனவுறுதியை வளர்ப்பதிலும் நோயாளிகளுக்கு நட்பாகவும், ஆதரவாகவும், உதவியாகவும் செயலாற்றச் செவிலியர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
கீழ்வரும் காரணங்களுக்காக உலகச் செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1. சுகாதாரச் சேவையில் செவிலியரின் பங்களிப்பை அங்கீகரித்தல்
2. நோயாளிகளின் நலனுக்காகச் செவிலியரைப் பயிற்றுவித்து பயிற்சியளித்தல்
3. செவிலியர்களின் பிரச்னைகளைப் பற்றி விவாதித்தல்
4. அவர்களின் பணியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுதல்
இத்தகைய சிறப்புமிக்க செவிலியர் பணி, ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவது இல்லை. அது செவிலியர் ஒவ்வொருவரின் மனதுக்கும் திருப்தி அளிக்கக்கூடிய மனிதநேய சேவை.
‘ஆண்டவனை எங்கே என்று பலர் தேடுகிறார்கள். வறியவர்களும் நோயுற்றவர்களும் துன்பப்படுகிறவர்களும் தாதியரால் ஆறுதல் அடையும்போது, தாதியரின் முகத்தில் தவழும் புன்னகையிலேயே இறைவன் இருக்கிறார்’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, பிணிகாலத்தில் நம்மை கண்மணி போல் காக்கின்ற, போர் மற்றும் இயற்கை சீற்ற காலங்களில் தனது உயிரை துச்சமென மதித்து, மற்றவர்களைக் காப்பாற்ற முன்னேறும் செவிலியர்களைக் கடவுளின் தூதர்களாக நாம் அனைவரும் போற்றி வணங்குவோம்.
ISSF World Cup: துப்பாக்கிச் சூட்டில் இந்திய ஜோடிக்கு தங்கம்!