எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த புகார் மனுவில், இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதேசமயம் மீண்டும் இவ்வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி. ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், “ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என வாதிட்டார்.
மேலும் அவர், “ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உள்ளது” என விளக்கமளித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை எனவும் வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,
“பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2018ல் செய்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மூடிமுத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பிரியா
மீண்டும் துவங்கிய தென்காசி மறு வாக்கு எண்ணிக்கை!
பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின் கடிதம்!
