சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்குள் ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்…
இதன் மூலம் சாதாரண மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படம் ஐபிஎல் (INDIAN PENAL LAW). கொரோனா காலகட்டத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவர் சொன்ன சம்பவங்களை தழுவி , எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம் இது என்கிறார்கள் இயக்குனர் கருணாநிதியும் தயாரிப்பாளர் மதன் குமாரும்.
நடிகர் கிஷோரும் பரபரப்பான எதிர்மறை விமர்சனங்களுக்குப் பேர் போன பைக் ரேசர் டி டி எஃப் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்தக் கருணாநிதி வெற்றி மாறனின் உதவியாளர் . இயக்குனர் சங்கத்தில் ஆர் கே செல்வமணியின் நண்பர் . இயக்குனர் சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றுபவர்
ஆர் கே செல்வமணியிடம் டி டி எஃ ப் , ” என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டபோது செல்வமணி சொன்ன பதில், ” எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும்.” என்றாராம் .
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் தான் நடிக்க வைக்க வேண்டிய நடிகைகளை எல்லாம் தனது குருநாதர் பாரதிராஜா முந்திக் கொண்டு நடிக்க வைத்த சோக வரலாற்றை சொன்னார்.
“நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காக தான் வந்தார். ஆனால் அவரோட வயசு கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் கொஞ்சநாள் காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார். அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். ராதாவை நான்தான் அறிமுகப்படுத்துவதாக இருந்தேன் . ஆனால் அவரையும் பாரதிராஜா சார்தான் அறிமுகப்படுத்தி விட்டார் “என்றார்
ஆக பாரதிராஜா அவர்களை அறிமுகப்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும் . ஆனால் அதற்காக பாக்யராஜை படுத்தி இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது.
— ராஜ திருமகன்
