இன்ஸ்டாகிராம் முடங்கியது ஏன்? காரணத்தை வெளியிட்டது மெட்டா!

Published On:

| By christopher

உலகளவில் நேற்று(அக்டோபர் 31) இரவு முதல் திடீரென முடங்கிய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தற்போது மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியுள்ளது.

நேற்றிரவு சுமார் 9 மணியளவில் இளைஞர்களின் பிரதான சமூகவலை தளமான இன்ஸ்டாகிராம் முடங்கியது.

அதனை பயன்படுத்தி வந்த பலரின் கணக்குகளும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டன. மேலும் பயனர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து பயனர்கள் பலரும் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் இதுகுறித்தான தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அதற்கு வருத்தம் தெரிவித்த இன்ஸ்டாகிராம் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு தற்போது இன்ஸ்டாகிராம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது.

சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். மன்னிக்கவும். தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம். அதை சரிசெய்துவிட்டோம்’ என்று அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் மற்றொரு சமூகவலைதளமான வாட்ஸ் அப் செயலி உலகளவில் 3 மணி நேரமாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

தொடர் கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share