தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் Z பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 17) அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் கெளதம் அதானி. இவர், அதானி குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
அண்மையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடகடவென உயர்ந்ததால் உலகின் 4ஆவது பெரிய பணக்காரராகவும் கெளதம் அதானி முன்னேறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானிக்காக அரசு பல்வேறு சலுகைகளை செய்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கெளதம் அதானிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பு தேவை எனவும் புலனாய்வு துறை மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இதையடுத்து, கெளதம் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவுசெய்தது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அதானிக்கு பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொண்டது.
அதன்பேரில் தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் Z பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு Z பிரிவு பாதுகாப்பு
இதன்படி, அதானிக்கு 30 வீரர்கள் அடங்கிய Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். எனினும், கெளதம்அதானிக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்புக்கு மாதம் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் செலவாகும். இந்த செலவுகளை அதானி குழுமமே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் ஏற்கெனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 2013ம் ஆண்டில் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் அதைவிடக் குறைந்த அளவில் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை அம்பானி குழுமம் ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்