இந்தோனேசியாவில் நேற்று (அக்டோபர் 1) நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, மைதானத்திலிருந்த இரு தரப்பு அணி ரசிகர்களுக்கிடையே, ஏற்பட்ட மோதலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரேமா மற்றும் பெர்சியா சுரபயா அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவிலுள்ள கஞ்சுருகான் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் பெர்சியா அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் அரேமா அணியை வீழ்த்தியது.

அப்போது மைதானத்தில் அமர்ந்திருந்த அரேமா அணி ஆதரவாளர்கள், தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்தனர்.
அரேமா மற்றும் பெர்சியா அணி ரசிகர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனால் விளையாட்டு மைதானம் போர்க்களமானது.
கலவரத்தை கட்டுப்படுத்த இந்தோனேசியா போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் விளையாட்டு மைதானம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்தவர்களை போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் வைத்து மட்டும் 93 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 180-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேசிய கால்பந்து அசோசியேஷன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு வாரத்திற்கு இந்தோனேசியாவில் எந்த போட்டிகளும் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
செல்வம்
