ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார். Indira Jaising sc action
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது சட்டவிரோதம் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர், ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில்,
“2020-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், ஒருவழியாக 2025-ஆம் ஆண்டு நிவாரணம் கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டாட்சி கட்டமைப்பை அழித்து, மாநிலத்தின் மீது மத்திய அரசின் ஆட்சியை செயல்படுத்த வழிவகுக்கிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் தமிழக அரசு அந்த சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசின் செயல்பாடு வரம்பு மீறியது என்று விமர்சகர்கள் சிலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால், நான் இதனை அப்படி பார்க்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஆளுநருக்கு வீட்டோ எனும் தனி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பின் விளக்கத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இந்த வழக்கில் கடைசி வார்த்தையாகும்.
பல அரசியல் கட்சிகளும் ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இருப்பினும், அவர் ராஜினாமா செய்யவில்லை.
ஆளுநர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை மீட்டெடுக்கப்பட்டாலும், தவறான குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டபோதும் ஆளுநர் பதவியில் தொடர உரிமை உள்ளதா என்பதுதான் தர்க்கரீதியான கேள்வியாக எழுந்துள்ளது” என்று இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார். Indira Jaising sc action