செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு இறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
நேற்று வரை முதலிடத்தில் உள்ள இந்திய ஏ மகளிர் அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று நடைபெற்ற கடைசி சுற்றில் இந்திய வீராங்கனைகள் தானியா சச்தேவ், பக்தி குல்கர்ணி ஆகியோர் தோல்வியடைந்தனர். ஹம்பி, வைஷாலி தங்களுடைய ஆட்டங்களை டிரா செய்தார்கள்.
இந்த தோல்வியால் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு இறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
உக்ரைன் மகளிர் அணி போலந்தை 3-1 என வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது.

ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
- க.சீனிவாசன்
