அக்டோபர் 19 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (அக்டோபர் 4) தேர்வு செய்யப்பட உள்ளது.
ஆசியக்கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன் முதல் டெஸ்ட் போட்டி அகமதாப்பாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கான அணி இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 19, 23, மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரையிலும் நடைபெறவுள்ளது.
இதில் முக்கியமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் திரும்ப உள்ளனர். இது அவர்களது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை மற்றும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் என ஓய்வின்றி விளையாடி வருவதாலும், நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடர் காரணமாகவும் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
