Table Tennis: 2024-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் வரும் ஜூலை 26 அன்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.
இந்த ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏப்ரல் 16 அன்று ஏற்றப்பட்ட நிலையில், அது போட்டி நடக்கும் பாரிஸ் நகரை ஜூலை 14 அன்று சென்றடைய உள்ளது.
இந்த ஒலிம்பிக் தொடரில் 32 விளையாட்டு பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டும் ஒன்று.
இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குழு பிரிவில் பங்கேற்கவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவில், இந்திய அணி சார்பில் நட்சத்திர வீரர் ஷரத் கமல், ஹர்மித் தேசாய் மற்றும் மானவ் தக்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வீரராக சத்யன் ஞானசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மகளிர் குழு பிரிவில், இந்திய அணி சார்பில் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வீராங்கனையாக அய்ஹிகா முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.
டேபிள் டென்னிஸ் குழு பிரிவில், ஒவ்வொரு அணிக்கு இடையேயான போட்டியிலும் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில், 4 ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் மற்றும் 1 இரட்டையர் பிரிவு ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, இந்த ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களுக்கு, இந்தியா சார்பில் ஏற்கனவே ஷரத் கமல், ஹர்மித் தேசாய் ஆகிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களுக்கு, மணிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இவை மட்டுமின்றி, டேபிள் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இந்தியாவில் இருந்து யாரும் தகுதி பெறவில்லை.
மேலும், இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழையால் ரத்தான SRH vs GT ஆட்டம், சிக்கலில் CSK, RCB!
சைந்தவியின் உருக்கமான பதிவு : டேக் செய்து ட்வீட் போட்ட ஜி.வி.பிரகாஷ்
உயர் ரத்த அழுத்த தினம்: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்?