சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. indian refrees not to go pakistan
இந்த போட்டிக்கான நடுவர்கள் பட்டியலை நேற்று (பிப்ரவரி 5) ஐ.சி.சி. வெளியிட்டது. 12 பேர் கொண்ட குழுவில் இந்திய நடுவரான நிதின் மேனன் இடம் பெறவில்லை. அவருக்கு தனிப்பட்ட வேலை இருப்பதால், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் நடுவர் பணியாற்ற மறுத்து விட்டதாக பிசிசிஐ கூறியுள்ளது.
உலகின் தலைசிறந்த நடுவர்களில் ஒருவராக நிதின் மேனன் கருதப்படுகிறார். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் உள்பட பல தொடர்களில் நடுவராக பணியாற்றியவர். இவர், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்காதது அரசியல் தலையீடு எதுவும் இருக்குமோ? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதே போல, சாம்பியன்ஸ் டிராபிக்கான 12 பேர் கொண்ட நடுவர் குழுவில் போட்டி நடுவரான மற்றொரு இந்தியரான ஜவஹல் ஸ்ரீநாத்தும் இடம் பெறவிருந்தார். ஆனால், அவரும் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்து கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர்ச்சியான போட்டிகள் காரணமாக வீட்டை விட்டு நீண்ட காலம் வெளியே இருந்ததாகவும், இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியின் போது, தான் விடுப்பு எடுத்து கொள்வதாகவும் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
ஆக , பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணியும் புறக்கணித்துள்ளது.
தொடக்க விழாவில் கேப்டன் ரோகித் பங்கேற்காததையடுத்து, அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது, இந்திய நடுவர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நைசாக நழுவிக் கொண்டுள்ளனர்.
