மூத்த குடிமக்கள் ரயில் பயணக் கட்டண சலுகை குறித்து அமைச்சரவை விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் தெரிவித்தார்.
கரூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் நேற்று (பிப்ரவரி.28) ஆய்வு மேற்கொண்டார். பெண்கள், ஆண்கள் ஓய்விடங்கள், கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து உணவுப் பொருட்கள் (கேட்டரிங் ஸ்டால்) நிலையத்தில் தேநீர் வாங்கி சுவைத்தவர், செய்தியாளர்களிடம் பேசியபோது,
”கொரோனாவுக்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு பிரிட்டனை வீழ்த்தி இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.
75ஆவது சுதந்திர தினத்தையொட்டி அம்ரித் பாரத் திட்டத்தில் 100 ரயில் நிலையங்கள் சிட்டி சென்டர் ரயில் நிலையங்களாக மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா காலத்தில் மூத்த குடிமக்கள் சிலர் தாங்களாக முன் வந்து கட்டண சலுகைகளை விட்டுக் கொடுத்தனர்.
மூத்த குடிமக்கள் ரயில் பயணக் கட்டண சலுகை குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும். வளர்ச்சிப் பணிகள் அடிப்படையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையை 12இல் இருந்து 75 ஆக அதிகரிக்கப்படும்.
மேலும் ரயில் நிலைய வளர்ச்சி, போக்குவரத்து, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
எத்தகைய திட்டங்கள் தேவை என்பது குறித்து அறிவதற்காக ஐஐடி மாணவர்கள் மூலம் தனியாக ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்த திட்டமிடப்படும்” என்று கூறினார்.
ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!