பல்வேறு சவால்களைத் தாண்டி இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக செயல்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும், முந்தைய காலாண்டையும் விடவும் மிக அதிகம் ஆகும். அமெரிக்காவின் வரிகள் போன்ற சவால்களையும் தாண்டி இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும். தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட இந்த புள்ளிவிவரங்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைகள் துறைகளின் வலுவான பங்களிப்பை காட்டுகின்றன.
மேற்கூறிய காலகட்டத்தில் நிலையான விலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 48.63 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 44.94 லட்சம் கோடியாக இருந்தது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7% உயர்ந்து ரூ. 85.25 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வளர்ச்சி விகிதத்தை “மிகவும் ஊக்கமளிப்பதாக” குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்களின் கடின உழைப்பு மற்றும் தொழில் முனைப்பை அவர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.2% வளர்ச்சி மிகவும் ஊக்கமளிக்கிறது. இது எங்கள் வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. இது எங்கள் மக்களின் கடின உழைப்பு மற்றும் தொழில் முனைப்பையும் காட்டுகிறது. எங்கள் அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்க்கை எளிமையாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை துறைகளின் பங்களிப்பு ஆகும். உற்பத்தித் துறை 9.1% வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல கட்டுமானத் துறை 7.2% வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இரண்டாம் நிலைத் துறை 8.1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சேவைகள் துறையும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. மூன்றாம் நிலைத் துறை 9.2% வளர்ந்துள்ளது. குறிப்பாக, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 10.2% வளர்ச்சி கண்டுள்ளன. இது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக சேவைகள் துறை இருப்பதைக் காட்டுகிறது.
தனிநபர் நுகர்வும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. தனிநபர் இறுதி நுகர்வுச் செலவு (PFCE) 7.9% உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6.4% ஆக இருந்தது. பருவமழை சீரற்றதாக இருந்தபோதிலும், மக்களின் வாங்கும் திறன் சீராக இருப்பதை இது காட்டுகிறது. ஆனால், விவசாயத் துறை சற்று பின்தங்கியுள்ளது. விவசாயத் துறை வெறும் 3.5% வளர்ச்சி கண்டுள்ளது. மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் விநியோகம் போன்ற பயன்பாட்டுத் துறைகள் 4.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்தத் துறைகளில் சற்று மந்தமான நிலை காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் இருந்த 6.1% வளர்ச்சியை விட அதிகம் ஆகும். இரண்டாம் காலாண்டில் முக்கிய தொழில்துறைகளில் பரவலான வளர்ச்சி காணப்பட்டதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GVA) வளர்ச்சி 8.1% ஆக இருந்தது. இந்த வலுவான வளர்ச்சி, இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக நிலைநிறுத்துவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
